சத்ய சாய் பாபா – 12

12. ப்ரேமாவதாரி

த்தனை பொல்லாத்தனம் பண்ணுகிறார் இந்த ஸ்வாமி? ஸ்வாமியாம் ஸ்வாமி, உள்ள நெஞ்சழுத்தத்தையும் வைத்துக் கொண்டு!” சேஷாத்ரிக்குக் கோபம் கோபமாக வந்தது.

சேஷாத்ரி என்று பெயரை மாற்றிக்கொடுத்திருக்கிறேன். ஸ்ரீஸத்யஸாயி ஸ்தாபன முக்யஸ்தர்களும், ஏனைய அணுக்கத் தொண்டர்களும் தங்களைச் சிறிதுடாம் டாம்போட்டுக்கொண்டு விட்டாலும் அவர்களுடைய அந்தப் பொல்லாத ஸ்வாமி முக்யத்வத்தையும் அணுக்கத்தையும் இல்லாமற் பண்ணிவிடுவாரே! அதனால் சேஷாத்ரி என்று புனைபெயர் போட்டிருக்கிறேன் ஸ்வாமியிடமே புஸ் புஸ்ஸென்று சீறியவருக்கு.

ஸாயி ஸ்தாபனத்தில் மட்டுத்தானா அவர் முக்யஸ்தர்? தம் தொழில் துறையிலுந்தான் முக்யஸ்தர். அவருக்கு எத்தனையோ ஜோலி. அதற்கிடையே ரொம்பவும் அவசரத்தில் ஸ்வாமியிடம் வந்திருக்கிறார்.

இவர் புட்டபர்த்திக்கு வந்திருப்பது பிற்பகலில். இரவு பெங்களூருக்குத் திரும்பியே தீரவேண்டும். மாலை ஆறரை மணிக்காவது புட்டபர்த்தியை விட்டுக் கிளம்பினால்தான் முடியும். இதிலொன்றும் சிரமமிராது என்றே சேஷாத்ரி திடமாக நினைத்தார். ‘நாம் நாலு மணிக்கு வந்திருக்கிறோம். கோரிக்கைக்கு உட்கார்ந்திருக்கும் பக்தர்களோடு நாமும் உட்காருவோம். ஸ்வாமி எப்படியும் சிறிது போதில் வெளியே வந்து தர்சனம் கொடுத்து, தனிப் பேட்டிக்கானவர்களைத் தேர்வு செய்வார். எத்தனையோ நெருக்கமாயுள்ள நம்மைக் கூப்பிடாமற் போவாரா?’ என்று எண்ணினார்.

ஏனைய அடியார்களோடு அமர்ந்தார்.

கசமுசவென்று கூட்டத்தினர் பேசிக் கொண்ட விஷயத்தைக் கேட்டு, ‘இதென்ன கஷ்டம்?’ என்றெண்ணினார் சேஷாத்ரி. ஸ்வாமி இரண்டு நாட்களாக தர்சனம், தனிப்பேட்டி எதுவும் தரவில்லையாமே! ‘இன்றைக்கும் இப்படியேதான் பொல்லாத்தனம் பண்ணுவாரோ?’

இம்மாதிரி தர்சனாதிகள் இல்லாதபோது, உள்ளே அவர் ஏதோ ஒரு பக்தருடைய கொடும் நோயைத் தாம் ஏற்றுக் கொண்டு கடும் உபாதிகளை (வெளியில் காட்டிக் கொள்ளாமலே) அநுபவித்துத் தீர்ப்பார் என்று சேஷாத்ரிக்கு நன்கு தெரியுமாயினும், தம்முடைய அவஸர சமயம் பார்த்து இப்படிப் பண்ணுவரானால் அது பொல்லாத்தனமாகத்தான் தோன்றியது.

ஸரி, அதனாலென்ன? அவரது அறைக்குள்ளேயே போய் வருகிற அந்தரங்கத் தொண்டர்களிடம் நாம் வந்திருப்பதாகச் சொல்லி அனுப்பினால் போச்சு. நம்மை உள்ளே அழைத்துப் பேசாமலிருந்துவிடுவாரா என்ன?’

இப்படி இவர் ஸமாதானம் பண்ணிக்கொண்ட போதே அன்று ஸ்வாமி பொல்லாத்தனம் பண்ணப் போவதில்லை என்று தெரிந்தது. ஸ்வாமியின் அறைக்குள்ளிருந்து இரு தொண்டர்கள் வந்து அறைக் கதவுக்கு எதிர்ப்புறம் சிறிது தொலைவில் பக்கத்துக்கு ஒருவராக த்வாரபாலகர்களைப் போல நின்றார்கள். ஸ்வாமி வெளியே வரப் போகிறார் என்பதற்கு இதுவே தப்பாத அறிகுறி.

வந்தார் மஹாராஜாவும்!

சேஷாத்ரியிடம் மஹா மஹா ராஜத்வத்தை படு படு பொல்லாத்தனத்தை காட்டிவிட்டார்! ஆம், இவரை நன்றாகத் பார்த்தபோதிலும் அழைக்கவில்லை. தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.

அவர் பாட்டுக்கு மேலே போனார். கூட்டத்தில் நெடுகிலும் போனார். போனது மட்டுந்தானா? யார் யாரையோ இன்டர்வ்யூவுக்குத் தேர்ந்தெடுத்துப் பிரசாந்தி மந்திருக்குள்ளே அனுப்பிவைத்தார். பொல்லாதவர், சேஷாத்ரியைஅம்போஎன்று விட்டு விட்டுத் தானும் இன்டர்வ்யூ கொடுப்பதற்காக மந்திருக்குள் போய்விட்டார்.

ஸ்வாமியாமே ஸ்வாமி! என்ன நெஞ்சழுத்தம்?’ என்று நம் சேஷாத்திரிக்கு ஆத்திரம் வராதா பின்னே? எத்தனை ஜோலிகளை ஊரிலே போட்டுவிட்டு, அத்தியாவசியப் பிரச்னைகளில் ஸ்வாமியின் ஆலோசனையும் ரக்ஷணையும் பெற ஓடோடி வந்திருக்கிறார்? மாலை மயங்குவதற்கு முன் புறப்பட்டே வேறு ஆகவேண்டும். இந்த ஸமயத்தில் இதென்ன உதாஸீனம் இந்த மஹாப்ரபுவுக்கு?

ஆனாலும் அவர் உதாஸீனம் செய்கிறாரே என்று நாமும் அவரை அப்படிப் பண்ண முடியுமா? நாம் அவருக்குத் தேவையில்லை. நம்மை விடுவதால் அவருக்கென்ன நஷ்டம்? ஆனால், அவரை விட்டால் நமக்கு ஆர் கதி? அது தெரிந்து கொண்டுதான் அவரும் துள்ளுகிறார்! சரி, நாம்தான் சின்னவனாகித் தொலைத்துவிட்டோமே, நம் பிரச்னைகளையெல்லாம் அவருக்கே கடிதமாக எழுதுவோம். ஆறரை மணிக்குள் அவர் கொடுக்கும் பேட்டிகள் முடிந்து, அவரை நாம் பார்த்துக் கடிதத்தைக் கொடுக்கிற வாய்ப்பு ஏற்படுமா பார்ப்போம். ராஜா பிடிபடாமலே கிராக்கி செய்துகொண்டால் கடிதத்தை இங்கேயுள்ள தபால் பெட்டியிலே போட்டுவிட்டு ஊருக்குப் புறப்படுவோம்.’

ஒன்று, இரண்டு, மூன்று, நாலு என்றுப்ராப்ளம் லிஸ்ட்டை எழுதினார் சேஷாத்ரி. கடிதத்தோடு காத்திருந்தார். மஹாகனக்காரர் வெளியே வந்தாரில்லை.

வேறு வழியில்லாமல் கடிதத்தைக் கைவசமே இருந்த கவரில் மடித்துப் போட்டார். முகவரியும் எழுதினார். தபால் பெட்டியில் போடப் போனார். நெஞ்சு வலித்தது. பிரசாந்தி நிலயக் காம்பவுண்டுக்குள்ளேயே உள்ள தபாற்பெட்டிதான் அது. இங்கே எத்தனையோ பாத்யதை படைத்த தாம் இப்படிப் போஸ்டல் தொடர்பு கொள்வது என்றால்வேதனை பிடுங்கியது. “இந்த ஊரினில் வந்தும் என் பாபம் தீரேனோ?” என்று நந்தனார் குமுறியதுபோல், புட்டபர்த்தி ஸந்நிதிக்கே வந்து, பொன் நிதியைக் கையெட்டத்தில் கண்டும், அதன் பட்டுப் பார்வை தன்மேல் பட்டும், இப்படித் தீண்டாதானாகித் தபால் மூலமா குறையிரக்க வேண்டும்?’

எத்தனை அத்தியந்தமாகப் பழகுபவர் இன்று எப்படி ஒதுக்கிவிட்டார்? அப்படி என்ன இன்று புதிதாகத் தப்புச் செய்துவிட்டேன்? என்னுடைய வண்டி வண்டியான தப்புக்கள் அவருக்கும், அப்படியிருந்த போதிலும் அவர் புரியும் கப்பல் :கப்பலான அருள் எனக்கும் பழகிப்போன மாமூல் தானே? இன்றைக்கு மட்டும் அவருக்கு என்னகேடு… (ஆமாம், அப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது)… என்ன கேஏஏஏடு வந்து விட்டதாம்?’

போஸ்ட் செய்ய மனம் வரவில்லை.

பக்கத்தில் புதுக் கட்டிடங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. அதற்காக நிறைய மணல் கொட்டியிருந்தது. அதிலே வந்தமர்ந்தார் சேஷாத்ரி.

மநோஹரமான மாலை. மனத்தைத் தொடும் வீணாகானம் பிரசாந்தி மந்திரிலிருந்து எழும்பி அச்சூழலுக்கே உரிய மௌனத்தில் மெல்லலைகளாகப் பரவியது. இன்னும் கொஞ்ச நேரத்தில் சக்ரவர்த்தி மந்திரின் மத்ய மன்றத்துக்கு வந்து வீற்றுக்கொண்டு அங்கு நடக்கும் பஜனை கேட்க ஆரம்பிப்பார். ஆறரையும் தாண்டிவிடும். இந்த துஷ்டத்தனத்தில் சேஷாத்ரிக்கு மாலையும் மநோஹரமாயில்லை; வீணையும் மனஸைத் தொடவில்லை. ஒன்றும் பிடிக்காமல் மணலைக் கையால் தேய்த்தபடி, பிசைந்தபடி உட்கார்ந்திருந்தார். பரேமாவதாரியாம் ப்ரேமமாவதாரி! பஜனுக்கு பஜன் இப்படிகிதாப் பாடுகிறார்களே!’

இருள் மந்த கதியில் கவ்வி வந்தது; ஹ்ருதயகிருளோ மண்டியே படர்ந்தது. ‘போஸ்ட் பண்ணிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான். அப்படித்தானா! ஆம்! கிளம்ப வேண்டிய தேதான்; அதில் கேள்வியில்லை. ஆனால் கிளம்புமுன் இந்த மஹாப்ரபுவுக்குப் போஸ்ட் பண்ணத்தான் வேண்டுமா என்பதே கேள்வி.’

தாமாக எழுந்திருக்க இருந்த சேஷாத்ரியிடம் ஸ்வாமியின் பணியாளர் ஒருவர் வேகு வேகு என்று ஓடி வந்து அவஸரப்படுத்தி எழுப்பினார். “ஸ்வாமி கூப்பிடுகிறார்என்ற இரண்டு வார்த்தைகளில் இரண்டு அம்ருதக் கடல்களை சேஷாத்ரியின் மீது சரித்து அவரைத் திக்குமுக்காடச் செய்தார்.

பஜனைக்கூடத்துக்குப் போகத் தமதறையிலிருந்து வராந்தா வழியாக வந்த பகவான் குறிப்பாக அதன் ஒட்டில் நின்று எட்டத்தில் தனியாக அமர்ந்துள்ள சேஷாத்ரியின் பக்கம் பார்த்தாராம். இவர் அவருக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்ததால் (அன்பு செய்வதில் ஸ்வாமிக்கு நாம் அனைவருமே புறமுதுகு காட்டித்தானாக வேண்டும்!) அவர் தம்மைப் பார்த்ததை இவர் பார்க்கவில்லை. உடனே ஸ்வாமி இவரை இட்டுவரத் தொண்டரை அனுப்பிவிட்டு, தாம் பஜனுக்குப் போகாமல் பேட்டியறைக்கே திரும்பச் சென்றிருக்கிறார். என்ன கருணை, என்ன கரிசனம்?

பொங்கும் இன்புணர்ச்சியிலேயே குற்றவாளியாகவும் சற்றுக் குன்றியபடி ஸ்வாமியின் பேட்டியறையை அடைந்தார் சேஷாத்ரி.

அசடுஎன்று அழைத்துக்கொண்டே ஸ்வாமி சேஷாத்ரியை நெருங்கினார்.

ஸாயி ஸ்தாபன முக்யஸ்தர், தம் தொழில் துறையிலும் முக்யத்வம் வாய்ந்தவர், பல ஜோலிக்காரர் இப்படியாகப்பட்ட ஸ்ரீமான் சேஷாத்ரியவர்கள் ஸ்வாமியின் திவ்ய நேத்ரத்தில் பிரகாசித்த அந்த நேச ஸ்வாதீனமே அவரது வெற்றிலை உதட்டின் செம்மைப் பரிமளத்தோடு அசடு என்ற மூன்று மதுர அக்ஷரங்களாகத் தம் மீது உதிர்ந்ததில் முத்து அபிஷேகம் பெற்று விட்டாற்போல் பூரித்தார்.

எத்தனை பொல்லாதவர்! செய்வதையும் செய்துவிட்டு, நமக்கு அசட்டுப் பட்டம் கட்டி அதிலேயே அத்தனை பொல்லாத்தனத்தையும் மறக்கப் பண்ணுகிறாரே! நாம் வடிக்கட்டின அசடுதான்! ஆனால் இத்தகைய முத்து அபிஷேகத்துக்காக இந்த வடிக்கட்டலை இன்னம் இறுக்கி வடிக்கட்டிய மஹா மஹா அசடாவதற்கும் தயார்தான்!’

பக்கலில் பக்ஷமாய் வந்து நின்ற பர்த்திநாதன் பச்சைக் குழந்தையாகி, இன்னொரு பச்சைக் குழந்தையாக சேஷாத்ரியை ஆக்கி, “எங்கே, கையைக் காட்டு!” என்றார்.

தன் அகம், ஆகம் யாவும் பனிப்பாறை படீரென உருகினாற்போல் விரிந்து திறந்து கொள்ள சேஷாத்ரி கையை விரித்துக் காட்டினார்.

அதிலே ஒட்டிக்கொண்டிருந்த மண் துகளையெல்லாம் ஸ்வாமியின் பட்டுக் கை நறுவிசாகத் தட்டிவிட்டது. அதோடு சேஷாத்ரியின் குறை உணர்ச்சி, இப்பேர்ப்பட்ட ஸ்வாமியிடம் குறைப்பட்டோமே என்ற குற்ற உணர்ச்சி இரண்டையுங்கூடத் தட்டிவிட்டது.

ஹிஸ்டீரியா, ம்? மண்ணைப் போட்டு பிசையறது! நீ துரை, நாலு மணிக்கு வருவே, உடனே ஸ்வாமி உன்னைப் பார்க்கணும்! இல்லாட்டி கோபம், ரோஷம்! மண்ணைப் போட்டுப் பிசையறதுகுழந்தை ஸ்வாமி நொடியில் ஆயிரம் பதினாயிரம் அம்மாக்களை அடைத்து வைத்துக் கொண்டவராக மாறிப் பேசினார். அப்படியும் கனக்காமல் லேசாகவே பேசினார். ஆனாலும், அது மணலைப் பிசைந்த சேஷாத்ரியின் மனஸைப் பிசை பிசை என்று பிசைந்து விட்டது. ஸ்வாமியின் ஸ்பரிசத்திலிருந்து இந்த மனஸைத் தட்டிவிட மட்டும் முடியாது. ஈரக் களிமண்ணாகக் குழைத்தல்லவா பூசிக் கொண்டுவிட்டார்? அசடு, களிமண் என்பதெல்லாம் ஸாயி ஸம்ஸ்தானத்தில் பெரிய பெரிய டைட்டில்கள். ஆமாம், ஹ்ருதயத்தை மட்டும் திறந்துகொள்ள வேண்டிய இடத்தில் புத்திக்கு என்ன வேலை? அசட்டுக் களிமண்ணாகத்தான் ஆகவேண்டும்!

பொம்மென்ற பொன்முகத்தைப் புன்னகை மேலும் உப்ப வைக்க ஸ்வாமி சேஷாத்ரியின் ஜேபியிலிருந்து கடிதத்தை இழுத்தார்.

லெட்டர் எழுதிட்டான் பெரிசாஎன்று சேஷாத்ரியின் கன்னத்தில் செல்லமாகக் குத்திவிட்டு, அதைப் பிரித்துப் படித்தார்.

படபடவென்று ஒவ்வொரு பிரச்னைக்கும் ரத்னச் சுருக்கமாகத் தீர்வு சொன்னார். சொந்த விஷயம், அலுவலக விஷயம் ஆகியவற்றுக்கு நுண்ணிய நடைமுறை ரீதியிலும், திவ்விய அநுக்ரஹ ரீதியிலும் தீர்வு தந்துவிட்டு, குடும்பச் சிக்கலுக்கு வந்ததும், “உனக்கு ஏண்டா இந்த ஒர்ரி? உன் ஸம்ஸாரத்தையும் மூத்த பிள்ளையையும் ஸ்வாமி எங்கிட்டே அனுப்பு. அவாளோடே ஸ்வாமி பேசிக்கறேன். ஸ்வாமி பாத்துக்கறேன்என்றார்.

குழந்தையாகி, அம்மாவாகி, இப்போது ஸ்வாமியாகி ரக்ஷணை, அபய ப்ரதானம் தருகிறார். பக்தனின் சுமையை இறக்கித் தாம் மனஸார ஏற்றுக்கொள்கிறார். ‘யோக க்ஷேமம் வஹாம்யஹம்என்று வெள்ளிக் கங்கணம் போட்டுக்கொண்ட தெய்வமாச்சே!

கொளகொளாப் பழமாகத் கனிந்த சேஷாத்ரி அவர் பாதத்தில் விழுந்து பட்டங்கி ஓரத்தில் தலையைப் புரட்டினார். அந்தப் பாதத்திலிருந்து சிலிர்த்த சிகை வரை அணு அணுவும் அன்பு முட்டும், ரோம ரோமமும் பிரேமை சொட்டும் மூர்த்தியை மூக்கு முட்டும் உள் அழுகையில் பார்த்துக் கொண்டு நின்றார்.

இவருக்கு ஏன் இந்தச் சிவப்புப் பட்டங்கி என்கிறார்களே! இந்தக் கோமள நெஞ்சத்தின் மேல் சார்ந்தால் கோணித் துணி கூட ஸில்க்காகத்தான் மாறும்; அது எந்த வர்ணமானாலும் இவரது அன்பின் ரக்த நிறமாகத்தான் மாறும்.

ஏன் இப்படிச் சிலிர்த்த முடி என்கிறார்கள். ஸதா ஸர்வகாலமும் கருணா ரஸத்திலே ஜிலீரென்று ஊறியிருந்தால், கேசம் எப்படி எக்காலமும் ரோமாஞ்ஜனமுறாமல் இருக்க முடியும்?

போகிறார்கள் அந்த புத்திசாலிக் கேள்விக்காரர்கள். இங்கே அசடும் களிமண்ணும்தான் ஐயா தேவை!

வணங்கியெழுந்த சேஷாத்ரி விடைகொள்கிற சமயம். ஸ்வாமி தம்முடைய நிஜமான பொல்லாத ஸ்வரூபத்தை அப்போது நன்றாகக் காட்டிவிட்டார்!

அவஸர ஜோலிக்காரனாச்சே, இப்பவே ஊருக்குப் புறப்படம்மாஎன்றார்.

அதோடு விட்டிருக்கக் கூடாதோ? கொளகொளாவைத் தொட்டு அதன் ஜூஸ் முழுதும் வடிகிற மாதிரி ஒரு பொல்லாத்தனம் பண்ணிவிட்டார்.

சேஷாத்ரிக்கு மிக மிக அருகில் வந்து பன்னீர்ப் பூவின் பரிமளத்தோடு சொன்னார். இந்தமிராகிள் வேந்தர்மென்மலரின் மிருது மணத்தாலேயே ஒரு பழத்தைக் குத்திச் சாறு வடிக்கிறமிராகிள் பொல்லாத் தனக்காரராக்கும்!

என்ன சொன்னார்?

இன்ன சொன்னார்: “நாயனா! நீ என்னை நல்லா கோவிச்சுக்கோ. என்னைவிட்டா யார்த்தான் கொழந்தைங்க கோவிச்சுக்கறது? என்னைவிட்டா பார்தான் அதை ஸந்தோஷமா வாங்கிப்பாங்க? அதனாலே நல்லா கோவிச்சுக்கோ! ஆனா ஸ்வாமியைவிட மட்டும் விட்டுடாதே!”

ப்ரேமாவதாரி என்று சொன்னால் போதுமோ? ப்ரேமையே இவரைப் பார்த்து இன்னொரு அவதாரம் பண்ணவேண்டும்!’ என்கிறீர்களா?

அதென்னமோ எனக்குத் தெரியாது. கொளகொளா சேஷாத்ரியை அப்படியே கண் வழியாக ஜூஸ் முழுதையும் கொட்ட வைக்கிறரை, பக்தரை அழ அழ வைக்கிறவரைப் பொல்லாதவர் என்றுதான் வாயாரச் சொல்லத் தோன்றுகிறது. இத்தனை அழுகையை உண்டாக்கிவிட்டுச் சிரித்து நிற்பவரை நெஞ்சழுத்தக்காரர் என்றுதான் நெஞ்சார வையத் தோன்றுகிறது. ஆனாலும் போட்டு வை(க்)கிறேன் ஒரு ஜே! “ஜேய், ஸாயிராம்!”

ஆம், அவர் ஒவ்வொரு சமயங்களில் எத்தனை அலக்ஷ்யம் செய்தாலுங்கூட அந்தப் பிரேம மூர்த்தியை வாழ்த்தாமலிருக்க இந்த வாயால், நெஞ்சால் முடியுமா என்ன?

முதலில் அந்த அலக்ஷ்யம் பண்ணினால்தான் பின்னர் அன்பின் ருசி கூடுகிறது. நாக்கு பட்டை விடுகிற போது அதில் சர்க்கரைப் பொடியை வைத்தால்தானே மாதுரியம் முழுக்கத் தெரிகிறது?

பிறரை அன்பினால் அழ அழ வைக்கிறபோது ஆனந்த பாஷ்பம்தான் கொட்ட வைக்கிறார். ஆனால்ஐயோ பாபம் (நமக்காக அடிக்கடிஐயோ பாபம்சொல்கிற ஐயாவுக்கே நாம் அதைத் திருப்புவோம்)… இதே அன்பினால் அவர் சோக அழுகையே அல்லவா அழுகிறார்?

***

நிஜமாகத்தான்! ‘ஸோஹம்எனும் அத்வைதப் பேரானந்த ஸ்வரூபி சோகமும் உறுவார் பிரேமையின் த்வைத லீலையிலே! தம் மன்னாதி மன்னத்துவத்தைச் சின்னதிலும் சின்னதாக்கிக் கொண்டு பேசுவார். சார்லஸ் பென்னிடம் உரையாடுகையில் உலகத்துக்குச் சொன்னதை விடவும் ஓர் உதாரணம் வேண்டுமா? “அன்புக் கண்ணீர் விட்டு, துக்கத்தோடு உங்களிடம் மறுபடி மறுபடி மன்றாடுகிறேன். காலம் விலை மதிப்பிட முடியாதது. அது ஓடிக்கொண்டேயிருக்கிறது. அதிலே உங்களைப் பிடிக்க மாயை வைத்த கவர்ச்சிக் கண்ணிகளில் விழாமல் என்னிடம் வாருங்கள். என்னை அணுகுங்கள். உங்களை நான் முன்னின்று ஒளிக்கு அழைத்துப் போகிறேன்; உங்கள் ஆன்மாவைப் பிரகாசப்படுத்துகிறேன்என்கிறார்!

புருஷ யத்தனமின்றித் தாமாகவே அடியார் மனத்தை வசியம் செய்வதுஹிப்னாடிஸம்என்று ஸ்வாமி நினைக்கிறார். முன்னே ஓரிடத்தில் சொன்னாற்போல், தாமே திருத்துவதில் லீலா நாடகம் இல்லை என்பதோடு, அதில் ஒருவித ஸர்வாதிகாரமும் இருப்பதாக நினைக்கிறார். பக்தர் ஸ்வயமாக நினைக்க விரும்பாத, நினைக்க முடியாத, சரணாகத நிலையை அடையும் வரையில் தாமே அவருக்காக எல்லாவற்றையும் செய்வது தகாது என எண்ணுகிறார். அந்த சரணாகத நிலைக்கு வராமல்தான், சாண் ஏறினால் முழம் சறுக்கிக் கொண்டு, என்ன பாடு படுகிறோம்? அவரையும் படுத்துகிறோம்? அந்தப் பாட்டைப் பட்டுக் கொண்டு நெஞ்சு புண்ணாகித்தான் ராஜப்பிரபு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார்! “அம்ஸுவன் ஜல் ஸிஞ்ச் ஸிஞ்ச் ப்ரேம பேல போயிஎன்று மீரா மாதா சொன்னாற்போல் கண்ணீரை வார்த்து வார்த்து அன்புக் கொடியை வளர்க்கிறார்!

தான் அன்பால் அழும்போதே, ‘நாம் அழுவதறிந்தால் அடியரும் அழுவார்களேஎன்ற பேரன்பால் அழும் உரிமையையும் தனக்குத்தானே மறுத்துக் கொள்ளும் தியாக ரத்தினம் நம் பெருமன். முன்பெல்லாம் தினமும் அவர் உண்ணும்போது அன்னை ஈச்வரி பக்கத்தே அமர்ந்து பெற்ற வயிறு பதற அழுவாளே! அப்போது பிரேம மூர்த்திக்கும் உள்ளழுகை ஊற்றெடுத்துத்தான் இருக்குமெனினும், உண்ணும் கவளத்தோடு அந்த அழுகையையும் விழுங்கிக் கொண்டு, அவளை உத்ஸாஹப்படுத்த ஹாஸ்யம் தானே செய்து கொண்டிருந்தார்?

பிரேமைக்காகவே உள்ளே அழுதுகொண்டு, பிரேமைக்காகவே அந்த அழுகையையும் அழுத்திக் கொண்டு வெளியிலே சிரித்துக் கொண்டிருக்கும் ஹாத் தியாகத்துக்கு மூன்றாண்டு முன் ஓர் அற்புத உதாரணம் கண்டோம்.

அவ்வருடம் திவி என்ற ஆந்திரப் பகுதியில் புயல் மழை பயங்கரமான உயிர்ச் சேதமும் பொருள் நாசமும் விளைவித்திருந்த சமயத்தில் பகவான் ஜயந்தி வந்தது. ஆயிரமாயிரம் அடியாரை ஏமாற்றக்கூடாது என்பதற்காகவே வழக்கம் போல் விழாக் கொண்டாடினார். பரமானந்தமாகவே தம்மைக் காட்டிக் கொண்டார். தமது பிரஸங்கத்தில் புயற்கொடுமை நிவாரணத்தில் அடியார் பற்ற வேண்டிய பங்கின் முக்யத்துவத்தைச் சொல்லி உடனே நிதி வசூல் தொடங்கினார். வேறெங்கும் மக்களின் பரிவுக் கதவம் அப்படிப் படீரெனத் திறந்திருக்கமுடியாது என்னும்படியாகப் பிரேம பகவானின் ஸாந்நித்ய சக்தியில் அன்றே ஸ்தலத்திலேயே எட்டு லக்ஷ ரூபாய் சேர்ந்தது. ஸாயி ஸ்தாபனங்கள் மட்டும் இதில் இரண்டு லக்ஷம் அளித்திருந்தன.

இரவு ஜூலா என்னும் ஊஞ்சலுக்கு எப்போதும் வெள்ளை அங்கி உடுத்துவரும் பெருமான் அவ்வாண்டு மட்டும் வழக்கமான செவ்வங்கியே பூண்டு வந்தார். எவருக்கும் காரணம் தெரியவில்லை. பிறகு நெருக்கமான ஒருவர் இது பற்றிக் கேட்க, “லக்ஷக்கணக்கான குழந்தைகள் புயலில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது என் மனசு ஸந்தோஷமாக இருக்க முடியுமா? ஆனாலும் உத்ஸவத்துக்கு வந்து விட்டவர்களுக்கு உத்ஸாஹம் குலையக் கூடாது என்றே ஆனந்தமாகக் காட்டிக் கொண்டேன். ஊஞ்சலுக்கும் ஒப்புக் கொண்டேன். ஆனாலும் இதற்காகத் தனியாக ஒரு அலங்காரம் பண்ணிக் கொண்டு வர மனசு கேட்கவில்லைஎன்றாராம்.

ஜூலாவின் போது ஸ்வாமியிருந்த கோலாஹலத்தைப் பார்த்த எவராவது அவர் உள்ளே புதைத்துக் கொண்டிருந்த சோகத்தை ஊகித்திருக்க முடியுமா?

***

சாமானிய விஷயங்களிலும் அவரது அன்பு எழுச்சிக்கு ஆயிரம் சான்று காட்டலாம்.

ஒரு முறை புட்டபர்த்திக்கு வந்திருந்த ஸ்வாமியின் அணுக்கமான அமெரிக்க அடியார் சிலர் பெங்களூருக்குத் திரும்புவதற்காக டாக்ஸி ஏற்பாடு செய்வதை அறிந்த ஸ்வாமி, “கூடாது, கூடாது, ரொம்பத் தப்பு. இத்தனாயிரம் மைல் ஸாயியைப் பார்க்க வந்தவங்க திரும்பறத்துக்குத் தாங்களே டாக்ஸி எடுக்கிறதுன்னா அது ஸாயிக்குஷேம்‘. இதையெல்லாம் ஸாயிக்கே நீங்க விட்டுடணும்என்றார்.

பெற்ற தாய் பேசுவளா இப்படி?

அவர்கள் விடை பெறும்போது சொல்கிறார்: “எவ்வளவோ தூரம், எவ்வளவோ செலவு பண்ணிக் கொண்டு நீங்கள்ளாம் வந்து காட்டின அன்பு ஸ்வாமி மனஸைத் தொட்டுடுத்து. கோடி கோடியாக் கொடுத்தாலும் அந்த அன்புக்கு விலை ஆகாது.”

நாம் அவரிடம் செலுத்தும் அன்பைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார் என்றால், அவர் நம்மிடம் செலுத்தும் அன்பைப் பற்றி நாம் என்ன சொல்ல? “ஸ்வாமிக்கு என்ன வேணும்? நீங்கள்ளாம் ஸந்தோஷமாயிருக்கணும். அதுதான் ஸ்வாமிக்கு வேண்டியதுஎன்று இதயம் நிரம்ப அவர் சொல்கிறபோதுலோகா: ஸமஸ்தா: ஸுகிநோ பவந்துஎன்ற வார்த்தைகளாலேயே வார்த்த விக்ரஹமாயிருப்பார்.

ஏதோ அமெரிக்காவிலிருந்து வந்தவர்களிடம் ஸ்வாமி ஓவராக வழிய விட்டார் என்று எண்ணிவிடாதீர்கள்.

அமெரிக்கர் உள்படப் பலருடன் ஸ்வாமி கார்களில் பெங்களூர் செல்லும் ஒரு சமயம். அப்போது தமது மானுடலீலையின் ஓர் அங்கமாக மிகத் தீவிரமான ரத்த அழுத்த நோய்க்கு ஸ்வாமி தம்மை ஆட்படுத்திக் கொண்டிருந்தார். நோய் இருந்தாலும் அதனால் நோவுகாணாத தெய்விகத்தைக் காட்டிவந்த அவருமே பயணத்தின்போது ஆயாஸ முற்று விட்டார். வேறு யாராயிருந்தாலும் அப்போது கண்மூடிப் படுத்து, காரை விரைவுபடுத்தி, நடுவே நிறுத்தாமல் ஊருக்குக் கொண்டு சேர்க்கத்தான் சொல்லியிருப்பார்கள். ஆனால் ஸ்வாமியோ வழக்கம்போல் வழிநெடுகப் பிச்சைக்காரர்களைக் கண்டபோதெல்லாம் வண்டியை நிறுத்தச் செய்தார். அவர்களுக்கென்றே பண்ணியெடுத்துக் கொண்டு வந்து தம் பக்கத்திலே வைத்திருந்த பணியாரங்களை ஒவ்வொருக்கும் தமது பொற் கையாலேயே வழங்கினார்.

பரட்டைத் தலையும், புளித்த கண்ணும், குஷ்டமும் முடமுமாக வந்த அவர்களைப் பற்றி நாமாக இருந்தால் அமெரிக்கர் போன்ற அயலார் முன் அவமானமே பட்டுக் கொண்டு, நாமும் கண்டுகொள்ளாமல் அயலாரும் காணவிடாமல் செய்யப் பார்ப்போம். பிரேமாவதாரியின் போக்கே வேறு!

***

ருமுறை ஸங்கிராந்தியின்போது ஒயிட்ஃபீல்டிலிருந்து புட்டபர்த்திக்குப் புறப்பட்டார் ஸ்வாமி. வழக்கமாகத் தாம் எப்போது திரும்புவோம் என்பதைச் சொல்லியறியாத ஸ்வாமிக்கே தம்மை வழியனுப்புவதற்காகச் சூழ்ந்துள்ள மாணவர்களின் துயரத்தைக் கண்டு தாங்கவில்லை போலும். எப்போது வருவார், எப்போது வருவார் என்று அவர்கள் தினந்தினமும் ஏங்குவதைவிட இன்னம் இரண்டு மாதத்துக்கு நிச்சயம் வரமாட்டார் என்று தெரிந்து கொள்வதே அவர்களுக்குச் சற்று நிம்மதியாயிருக்கும் என எண்ணினார் போலிருக்கிறது. அதனால் வழக்கத்துக்கு விரோதமாகச் சொன்னார்: “புட்டபர்த்தியிலே ரொம்ப கன்ஸ்டிரக்ஷன்ஸ் இருக்கு. ஸ்வாமி ஸூபர்வைஸ் பண்ணிக் கொண்டிருந்தான் கிடுகிடுன்னு ஆகும். அதனாலே இன்னம் இரண்டு மாஸம் அங்கேயே இருந்து, சிவராத்ரியெல்லாம் முடிச்சுக் கொண்டுதான் திரும்பி வரப்போறேன். ஸ்வாமி இல்லையேன்னு அழப்படாது. (இப்படி அவர் சொல்லும்போதே, இதுவரை திடமாக இருந்த பசங்களுக்கும் அழுகை வருகிறது!) ஸ்வாமி எப்பவும் எல்லார் பக்கத்திலேயும், முன்னேயும், பின்னேயும் மேலேயும், கீழேயும், ஹிருதயத்திலேயேயும் இருக்கேன். ஸ்வாமியும் ட்யூட்டியைக் கரெக்டாப் பண்ணணுமோல்லியோ? அதனாலே பௌதிகமாகப் பிரிஞ்ச மாதிரி போறேன்.”

புறப்பட்டு விட்டார் புட்டபர்த்திக்கு.

ஸ்வாமி எத்தனை சொன்னாலும் அவரது அன்பிலே விசேஷ இடம் கொண்ட பசங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வள்ளிசாக இரண்டு மாதம் உடன் இருப்பதற்கில்லை என்று போகிற போக்கில் குண்டைப் போட்டு விட்டுப் போய்விட்டாரே! அந்தப் பசங்களுக்கு அதுகண்ணீர்ப் புகைக் குண்டாக இருந்தது! கண்ணன் இல்லாதபிருந்தாவனம்பாலைவனமாகப்பட்டது.

ஸங்கிராந்திச் சர்க்கரைப் பொங்கல் பாகற் காயாகத்தான் கசந்தது, மாமதுர ஸாயியை, மாமதுரா மாயியை உடன்பெற்றிராத மாணவருக்கு! மறுநாள் ஸாயிக் கண்ணனுக்குப் பிடித்த மாட்டுப் பொங்கலாயிற்றே! போகிப் பண்டிகையன்று கிரிதரகோபாலன் மலையைக் குடையாகத் தூக்கி ஆநிரைகளைப் பேய் மழையிலிருந்து காத்ததாகவும் அதன்பொருட்டே இரண்டு நாள் தள்ளி மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுவதாகவும் ஸ்வாமி அவர்களுக்குச் சொல்லியிருக்கிறார். மீராவைக் கவர்ந்தது இந்த கிரிதர கோபாலக் கோலம்தான். ஸ்வாமிக்கோ மீராவிடம் ஒரு தனிப்பற்று உண்டு. ஆகையால் மாணவர்கள் அன்று தங்களுக்கே உரிய கலைத்திறனையும் காரியத் திறனையும் கூட்டிக் கலாசாலையையும் கோசாலையையும் அலங்கரித்தார்கள். ஆநிரைகளை ஆராதித்தார்கள். “ஆவோ, ஆவோஎன்று தங்கள் ஆயனைக் கூவிக் கூவிக் கூப்பிட்டு ஆவி சோர பஜனை செய்தார்கள்.

கண்ணன் குழல் கோபியரைச் சுண்டியிழுக்குமென்றால், கோபர்களின் குரலும் கண்ணனைச் சுண்டி ஈர்க்கத்தான் செய்யும்.

திடுதிப்பென்றும் மாட்டுப் பொங்கலன்று மத்தியான்னம் ஸ்வாமி புட்டபர்த்தியிலிருந்து புறப்பட்டு ஒயிட்ஃபீல்டுக்கு வந்து குதித்துவிட்டார்!

ஒரு வயல் நிறைய வாடிக்கிடந்த பயிர்கள் வான் மழையில் பச்சென்று தலைதூக்கினாற்போல் பிருந்தாவனம் இன்பிலே தழைத்தது. அன்புத் துளஸி அதி ஸுகந்தமாகக் கமழ்ந்தது.

ஒரு சில நாள்கள் அன்புக் குழந்தைகளை ஆற்றித் தேற்றிய பின் ஸ்வாமி புட்டபர்த்திக்குத் திரும்பினார்.

இதைப்பற்றி தாமும் மாணவர் அன்புக்குப் புறமுதுகு காட்டி அவர்களை ஜயசாலிகளாக்கியது பற்றி ஸ்வாமி பூரிப்புடன் சொல்வார். மாவீரனாயினும் தன் சொந்த மகனிடம் மாத்திரம் தோல்வியுறவே விரும்புவான்புத்ராத் இச்சேத் பராஜயம்என்பார்களே!

சொல்வார்: “ஸ்வாமி ஸங்கல்பம் என்பது இரும்பு போல் உறுதியானது. அப்படியிருந்தும் இரண்டு மாதம் புட்டபர்த்தியில் இருக்க நான் செய்த ஸங்கல்பத்தை எப்படி இந்தப் பசங்கள் மாற்ற முடிந்தது என்கிறீர்களா? அவர்களுடைய அன்பின் தாபம் அக்னியாகக் கொழுந்து விட்டது. ஊது உலையில் காய்ச்சிய இரும்பாக ஸ்வாமியின் ஸங்கல்பமும் நெகிழ்ந்து, வளைந்து, உருகிவிட்டது”.

***

ம்மிடம் எவரும் எத்தனை விரோதமும் பாராட்ட இடமுண்டு. தெரிந்தும் தெரியாமலும் நாம் இதற்கு இடம் கொடுக்கும் மனிதர்களாக, குறை நிறைந்த மனிதர்களாக இருக்கிறோம். இருந்தும் இந்த நியாயம் நமக்குப் புரியாமல், ‘நம்மையும் ஒருத்தர் விரோதிப்பதா?’ என்று எண்ணுகிறோம். பிற்பாடு என்றேனும் விரோதித்தவர்கள் தாங்கள் செய்தது தவறு எனக் கருதி நம்மை வந்து சேர்ந்தாலும் நம்மால் பூரணமாக மன்னித்துவிட்டு, தவற்றை அடியோடு மறந்துவிட முடிகிறதா? ஸந்தர்ப்பம் வரும்போதெல்லாம் அவர்கள் நம்மிடம் நியாயமின்றி விரோதம் பாராட்டிய நாள்களைப் பற்றிக் குத்திக் காட்டிக்கொண்டுதான் இருப்போம்.

இவ்விஷயத்தில் ஸ்வாமி எப்பேர்ப்பட்ட மேருவாக உயர்ந்து நிற்கிறார்?

அவரை எவருமே விரோதிக்க எள்ளளவு நியாயமும் இல்லாதபோதிலும் எத்தனையோ பேர் பகைமை பாராட்டியிருக்கின்றனர். அவர்களது துவேஷப் பிரசாரத்தால் தம் பக்தர்களுக்கு மனச்சலனம் உண்டாகாமலிருப்பதற்கே ஸ்வாமி அவர்கள் பழிப்புக்கு மறுப்புச் சொல்லிப் பிரஸங்கத்தில் காரசாரமாகத் தாக்குவார். சொல்தான் தாக்கும். மனம் அந்தத் தங்க மனம் தாக்காது. மனத்தால் இவர் தாக்கினால் அப்புறம் அந்தப் பகைவர் பஸ்மம்தான்! இதுவரை அப்படி எவரும் ஆகவில்லையே!

இதிலே நமக்கும் அவருக்கும் இன்னொரு மாறுபாடு. நமக்கு நம்மை விரோதிப்பவரைத் தாக்கிப் பேசத் தோன்றினால் தனியாக நம் வட்டத்துக்குள்தான் இதைச் செய்வோம். பொதுவிடத்திலோ நாம் அவர்களது பகையைப் பாராட்டாமல் அமைதியாக இருப்பதாகப் போலி நடிப்புச் செய்வோம். ஸ்வாமியோ பொது மேடையில் சில சந்தர்ப்பங்களில் பகைவரைச் சாடுகிறாரேயன்றி, தனியாக இருக்கும் போது அந்தப் பேச்சை எடுப்பதேயில்லையாம்! வெகு நெருக்கத்திலுள்ள ஸர்வஸ்ரீ கஸ்தூரி, பகவந்தம், கோகாக், ஜோகாராவ் போன்றவர்களிடம் கூடத் தப்பித் தவறி ஒரு வார்த்தை தம்மைப் பகைப்பவரைப் பற்றிச் சொல்வதில்லையாம். அவர்களும் பக்குவமானவர்களாதலால் இவ்விஷயமாகப் பேசமாட்டார்கள். எப்போதேனும் பேசினாலுங்கூட அதைக் காதில் போட்டுக் கொண்டதாகவே பகவான் காட்டிக்கொள்ள மாட்டாராம்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன், ஸ்வாமியிடம் தீவிரத் துவேஷம் கொண்ட ஒரு யோகி (அவரது ஸாதனா மார்க்கம்துவேஷ யோகம்போலும்! அவரது இன்னுயிரைப் பறிப்பதற்கென்றே சீடர் ஒருவரைப்ளாக் மாஜிக்என்கிற ஏவல்சூன்ய மாந்திரீகங்களில் பயிற்றுவித்து, ஸ்வாமியை நிழல் போலத் தொடர்ந்து தம் கொடுஞ் செயலை முடிக்கும்படியாக அனுப்பி வைத்தார். அவரும் வாரக் கணக்கில் பிரசாந்தி நிலயத்திலிருந்து கொண்டு என்னென்னவோ மாந்திரீகங்கள் பண்ணிப் பார்த்தார். எல்லாம் மேரு மலையைக் குருவி பெயர்க்கப் பார்க்கிற முயற்சியாகவே இருந்தது. கடைசியில் அவர் முயற்சியை விட்டுப் போய்விட்டார்.

ஸ்வாமியின் இந்த ஆற்றல் மேருத்வம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஐயனின் பகையறியாப் பிரேம மேருத்வத்தைப் பாருங்கள். பிரதியாக ஸ்வாமி மாந்திரீகரைப் பழி வாங்காததில் வியப்பதற்கேதுமில்லை. அப்படிச் செய்திருந்தால்தான் வியக்கவேண்டும். ஆனால், வஞ்சகத் திட்டத்தோடு இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்று பிரசாந்தி நிலயத்தினரில் சிலர் தெரிந்துகொண்ட பின்புங்கூட, ஸ்வாமி எவரிடமுமே இதைப் பற்றி ஒரு சொல் சொன்னதில்லை என்பது எத்தனை ஆச்சரியம்!

முன்பே பார்த்தோம், உலகுக்கு போதனையாக அமைந்த தம் வாழ்க்கையைப் பற்றி ஸ்வாமி விவரிக்கையில் தமக்குக் கெடுதல் செய்த பலரைக் குறித்துப் பேச வேண்டியுள்ள போதிலும் லவலேசம் மனக் காழ்ப்பின்றியே விஷயத்தைச் சொல்கிறாரென்று.

மான ரக்ஷகரான ஸ்வாமி நம் அஹந்தை அறுபடுவதற்காக ஒவ்வொரு ஸந்தர்ப்பத்தில் நமது மானத்தை வாங்கவும் வாங்குகிறார் என்பதில் அடியார்களுக்கெல்லாம் அநுபவமிருக்கும். அவமான அனுபவத்திலேயே ஆனந்தமும், மானபங்கம் செய்த பங்காருவிடம் வெகுமான நன்றியும் பெருகும்! ஆனால் இன்னோர் அம்ருத அம்சத்தை அடியார்கள் எண்ணிப் பார்த்திருப்பார்களோ என்னவோ? என்னைப் பொறுத்தமட்டில் இதை நினைக்கும்போதுதான் நம் பிரபு எப்படிப்பட்ட உத்தமோத்தமன் என்று மரியாதை விழுமி எழுந்து, மானஸிகமாக அவரது பாதம்பட்ட மண்ணில் சிரஸைப் புரட்டத் தோன்றும். “மானமு லேதா?” என்று தியாகையர் மிரட்டியதற்கு, “லேது லேது, லேதவே லேதுஎன்று அவர் சிரித்துச் சொல்லிமானம் கெட்டவராகநிற்கிற பெருமையைத்தான் சொல்கிறேன். நம்மில் எத்தனை பேர் எத்தனை ஸந்தர்ப்பத்தில்இவர் அவதாரமில்லையோ?”, “இவரை வழிபடிவது தவறோ?”, “இவர் போலியோ, பூச்சாண்டியோ, காமுகரோ, கள்ளப் பணக்காரரோ?” என்றெல்லாம் ஸம்சயித்திருக்கிறோம்? நம்மையும் தயங்காது ஏற்றுத் தாங்கும் தயாளுவை நம் நாயகனாக வெளியாரிடம் வெளியிட்டுச் சொல்ல எத்தனை தயங்கியிருக்கிறோம்? இதையெல்லாம் அப்படியே தட்டிவிட்டு மான அபிமானம் கெட்ட மஹா மஹா நல்லவராக அவர் இப்படிப்பட்டவரிடம் அன்பொன்றே காட்டுவதில்தான் அஹம்பாவ முனைப்பு அறவே நீங்கிய utter egolessnessன் அத்தர் மணத்தை நுகர்கிறேன்.

குரு ஸ்தானத்திலிருக்கிறவரிடம் குறையே காணக் கூடாது என்பார்கள். நம் ஸ்வாமி போலத் தம்மிடம் குறையே கண்ட ஆயிரமாயிரவர்க்கு குரு மட்டுமின்றி தெய்வமுமாகி, அதன் பின்புங்கூட அவ்வப்போது அவர்களின் சங்கைகளுக்குப் பாத்திரராகி, இவ்வளவையும் எட்டுணையும் எண்ணாத இன்னொருவரைக் கற்பனையில் கூடக் காணவொண்ணாது.

ஸ்வாமி ஸம்பந்தம் தமது குடும்பத்துக்கோ, அலுவலகத்துக்கோ கடுகளவு இருப்பதாக உலகம் நினைக்க நேரிட்டாலும் அது மாளாத அவமானமாகும் என்று நினைத்த ஒரு பிரமுகர் உண்டு. அவரது அலுவலகத்தின் மூலம் ஸ்வாமி மஹிமையைப் பிரசாரம் செய்திருக்க முடியும். இப்பணியைச் செய்யுமாறு அவரைக் கேட்டுக் கொண்ட ஸாயி பக்தர்களும் உண்டு. அவரோ இதில் எச்சில்பட்டாற்போல் அருவருப்படைந்து, அப்பக்தர்களைக் கிலேசப்படுத்தி அனுப்பியிருக்கிறார். தம்முடைய ஒரே தெய்வ மஹாகுருவைப் பற்றியே அவர்களிடம்ஓஹோஎன்று சொல்வார். ஆனால் உண்மையில் அந்த ஒரு குரு மட்டுமின்றி, ஏனைய பல ஸமய முக்யஸ்தர்களையும் அவ்வப்போது பிரசாரப்படுத்தியும் அவர்களின் சங்கத்தைப் பெற்றும் வந்தார். பின்னொரு சமயம் அவருடைய அலுவலகத்தில் ஒரு பூகம்பமே ஏற்பட்டது. அதன் விளைவாகக் குடும்பத்திலும் இடி இடித்து விட்டது. சிதறி விழவிருந்த பிரமுகரை அவரது ஆதரவு பெற்ற எந்தப் பெரியாரும் தூக்கி நிறுத்தவில்லை. பதறி வந்தார் பர்த்தி நாதனிடமே. பரிவுப் பிரவாஹமே ஆகி நமது ஸ்வாமி அவரைத் தூக்கி நிறுத்தி உத்ஸாஹமும் புனர் வாழ்வும் ஈந்தார்.

அந்த அதியாச்சரிய அன்புப் பாங்கை என்ன சொல்ல? பிரமுகருக்கு ஸ்வாமியிடம் மன்னிப்புக் கேட்கக்கூடத் தோன்றவிடாதபடி, அவரைக் கண்டதிலிருந்தே அவர் ஏதோ ஆதியிலிருந்தே தம்மிடம் அன்பு பொழிந்த அத்தியந்த தாஸர் போல அவரைபங்காரு, பங்காருஎன்று ஸ்வாமி அழைத்துச் செல்லமே அல்லவா கொடுத்து விட்டார்?

பிரமுகராக இருந்தபோது அவரைத் தம்பால் இழுத்துத் தாமும் அவரால்பிரபலமடையாமல், அவர் அவலமாகி நின்றபோது அரும் பலமாக அவரை ஸ்வாமி ஏந்திக் கொண்டது நம் ஏந்தலிடமே காணக்கூடிய குணச் செவ்வியாகும். அடிபட்டு, இடிபட்டு வந்த குழந்தையை வாரிப் போட்டுக் கொள்ளத்தான் ஸாயிமாதா அறிவாளேயன்றி, ‘அந்த நாளில் அப்படி இருந்தாயே!’ என்ற குத்தல் மொழி ஸுசனையாகக்கூட அவளது திருநாவில் வராது என்பதற்கு சிறப்பான சான்றாக இது அமைந்தது. மன்னிப்பு மன்னர் என்றாலும் போதாது, மன்னிக்க ஏதுமே இருப்பதாகக் காணா மஹாமனஸ்வியை!

நமது மனஸ்வியின் மானங்கெட்ட மஹிமை இன்னொரு எவரெஸ்டில் எவர்ரெஸ்ட் ஆக ஆரோஹணித்திருப்பதற்கும் இதிலேயே சான்று கண்டேன். அந்தப் பிரமுகரின்ஒரே தெய்வ மஹாகுருமெய்யாலுமே அருளிலும் ஆற்றலிலும் பேருயர்வு எய்தியவர்தாம். ஆயினும் பாபாவை அவர் விரும்பவில்லை என்றே அவருக்கு நெருக்கமான பலருக்கு அபிப்ராயம். நமது பிரமுகர் பாபாவிடம் வந்த பிறகும் அந்த குருவை விடாமல் அவரிடமும் சென்று வந்தார். எனினும் அவரிடம் பாபாவைப் பற்றி பிரஸ்தாவமே செய்யமாட்டார். ஆனால் பாபாவைத் தாம் முன்பே ஆச்ரயிக்காததற்கு அந்த குருவின் வட்டத்திற்குள்ள அபிப்ராயமும் ஒரு காரணம் என்று பாபாவுக்கும் தெரிந்தேயிருக்கும் என்று பிரமுகருக்குத் தெரியுமாயினும், தாம் இப்போதும் அந்த குருவிடம் போய் வரும் விவரங்களை ஸர்வ ஸஹஜமாக பாபாவிடம் தெரிவிப்பார். பாபாவும் மகிழ்ச்சியோடு கேட்டுக் கொள்வார். அதோடுகூட பிரமுகராகச் சொல்லாதபோது கூட, ஸ்வாமியே அவரிடம், “இந்த விஷயமாக அவரை (குருவை)க் கேட்டியோ? அவர் என்ன சொன்னார்?” என்று கௌரவ உணர்வுடன் கேட்பார். அந்த குருவைப் பற்றி சிலாகித்தும் கூறுவார்.

இந்த குருவட்டம் மட்டுமில்லை. ஜீவியவந்தர்களாக உள்ள இன்னும் அநேக மஹான்களும், ஜீவியவந்தராக இல்லாத மஹான்களின் பெயரில் ஆசிரமங்களையும் மடங்களையும் நடத்துகிறவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். அநேகமாக இவர்கள் யாவருக்குமே ஸத்யஸாயி என்றால் மட்டும் நல்லபடி நினைக்கத் தயக்கம்தான்! அநேக ஆசிரமங்களில், மடங்களில் அவர்களது மூல புருஷருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், ஏனைய மஹான்களின் படங்களும் அங்கெல்லாம் இடம் பெறக் காண்போம். ஷீர்டிக் கிழவர்கூட இவற்றில் இருப்பதுண்டு. ஆனால் பெரும்பாலும் நம் பர்த்திக்காரரை மட்டும் தீண்டாதவராக விலக்கி வைத்திருக்கும்! அவற்றின் ஸஞ்சிகைகளில் பிற பெரியார்களைப் பற்றி நீளமாகவோ சுருக்கமாகவோ குறிப்புக்களும் அவர்களது உபதேசங்களும் வெளியிட்டிருக்கும்; ஆனால் நம் அப்பன் மட்டும் ஸென்ஸார் செய்யப்பட்டிருப்பார்!

என்றாலுங்கூட இந்த மடங்களை, ஆச்ரமங்களை, ஜீவியவந்தர்களான மற்ற பெரியவர்களை ஆச்ரயித்தவர்களில் பலர் ஸ்வாமியிடம் வருகிறார்களே, ஸ்வாமி திணையளவேனும் ஆக்ஷேப வார்த்தை சொல்கிறாரோ?

ஸ்ரீ கோகாக் போன்ற பக்குவி ஒருவர் தம்மையே தெய்வமாகக் கொண்ட பின்னும் அவர் அரவிந்த ஸங்கத்தில் தொடர்ந்து பணிபுரிய ஆசி கூறுகிறார்; அவரது குலகுருவான பாலேகுண்ட்ரி பண்டா மஹாராஜின் பிம்பத்தைத் தாமே மெடீரியலைஸ் செய்து அவருக்கு தருகிறார்.

ஸ்ரீராமகிருஷ்ண சாரதா தேவியரின் திருவுருவங்களைத் திறந்து வைத்துப் புகழாரம் சூட்டுகிறார். தமது வெகு நெருக்கப் பார்ஷதராயிருந்த ஸ்ரீ ராஜா ரெட்டியின் பிள்ளைக்கு விவேகாநந்தா என்று நாமகரணம் செய்கிறார்.

இன்னொருவரிடம், “உன் குரு பெங்களூரில் இருக்கிறார்என்று சொல்லி, அப்போது அங்கேயிருந்த ஸ்ரீ மஹேஷ் யோகியிடம் அனுப்புகிறார்.

ரமண பகவான் நூற்றாண்டுத் தொடக்கத்தில் என்னிடம், “ரமண சரித்திரம் பரம பவித்ரம். அவரைப்பற்றி நிறைய எழுதுஎன்று ஆசி கூறியிருக்கிறார்.

சங்கரராமாநுஜமத்வாசாரியர்களின் அருமை பெருமைகளை ஸ்வாமி எவ்வளவோ விளக்கியிருக்கிறார்.

தம்மை இழிவாகவே நினைக்கும் மடாலயங்கள், ஆசிரமங்கள் விஷயத்திலும் துளியேனும் கசப்புணர்ச்சி இன்றி, அவை செய்யும் ஸேவையில் சிறப்பாகத் தோன்றுவதைத் தமது ஸ்தாபனத்தாருக்கும் ஸ்வாமி எடுத்துக்காட்டாகக் கூறுவதுண்டாம்.

ப்ரேமாவதாரிஎன்பது இந்த அத்யாயத்தின் தலைப்பு. பிரேமை என்பது இன்னொருவர்பால் சென்று அவர்களுக்கு இன்பு தரும் அருள் மட்டுமல்ல. தன்னில் தானே எதனிடமும் பேத உணர்ச்சியின்றி, தன்னிடம் பேதமுள்ளோரிடத்தும் ஸம சித்தமாயிருப்பதுந்தான் பிரேமை. ‘பகைமை அறியாப் பாங்கே ப்ரேமைஎன்ற நோக்கில்தான் இவ்வத்யாயத்தில் இவ்விஷயமும் கூறினேன்.

***

மது ஜீவிதமே நமக்கு போதனை என்னும் பகவான் சொற் போதனையாலும் நமக்குப் பிரேமையின் பெருமையைத் தெரிவிக்கிறார். ஓரிரண்டு எடுத்துக்காட்டுக்கள்:

வறண்ட பாலைவனங்களில் வாரி இறையுங்கள் அன்பு வித்துக்களை. விடாமுயற்சியை அதில் நீராக வார்த்து வாருங்கள். பாலையில் பசுமுளைகள் கிளுகிளுத்து வளர்ந்து, பிரேம புஷ்பங்கள் பூத்துக் குலுங்கிக் காற்றையெல்லாம் மணக்கச் செய்யட்டும்.”

ப்ரேம நதியின் அலைகள் உலகெலாம் பரவிச் சலசல த்வனியிடச் செய்யுங்கள். புதரும் மரமும் உயிர்த்துத் தழைத்த மலைப் பள்ளத்தாக்காக உலகம் பசுமைகொள்ளட்டும். பக்ஷிகளும் பசுங்குழந்தைகளும் கலகல த்வனியில் ப்ரேம கீதம் பாடட்டும்.”

நான் செய்வது அத்தனையும் உங்களுக்காகத்தான்; எனக்காக அல்ல. ‘என்னுடையதுஎன்று சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறது உங்களையெல்லாம் தவிர?”

ஒரு ஸமயம் கேட்டார், தமது படத்துக்கு ஏன் விலை உயர்ந்த சட்டங்கள் போட்டுஎக்ஸிபிஷன்ஆக்க வேண்டும் என்று. அன்புச் சட்டத்தில் ஸாக்ஷாத் அவரையே நம் இதய சித்ரமாக உள்ளே அடக்கிக் கொண்டு விடலாமாம். “ப்ரேம்தான் ஃப்ரேம்என்றார், ஆணிமுத்து வாசகமாக.

எந்தச் சட்டத்துக்கும் மேம்பட்ட ஸ்வாமியை நாம் அன்புச் சட்டத்துள் அகப்பட (நம் அகத்திலே பட) வைப்போமோ, மாட்டாமோ, அவர் நம்மை பிடித்து வைத்துக்கொண்டு, “நான் உங்களை உதறவே மாட்டேன். தாயார் ஆயிற்றே!” என்கிறார்.

மக்கள் ஒருவருக்கொருவர் வைக்கும் அன்பே பகவானிடம் பக்தியாகிறது என்றும், பக்தியைப் பிரேம யோகம் என்றே சொல்லலாம் என்றும் ஸ்வாமி சொல்வார். அவரவர் மனப்பான்மையை ஒட்டி வெவ்வேறு யோகங்களை விதிப்பாராயினும் பொதுவாக பக்தியும் ஜன சேவையும் கலந்த பிரேம யோகத்தையே மிகவும் உயர்த்திப் பேசுவார். இதிலேயே பெரும்பாலார் ஈடுபட முடியுமாதலால் அவர்களுக்குப் பிற மார்க்கங்களில் சபலம் ஏற்படாமற் தடுக்கவோ என்னவோ, மற்ற யோக மார்க்கங்களைக் குறைத்தும் இதை மாத்திரம் உயர்த்தியுங்கூடப் பேசுவார். “யோகம் என்றால் பிரேம பக்தி யோகந்தான். இறைவனை அடைய இதுவே நேர் மார்க்கம். மற்ற யோகங்களெல்லாம் க்ரியா யோகம், ஹடயோகம், ராஜ யோகம், ஸாயி யோகம் என்பதாக என்னவோ சொல்லப்படுகிறதே அது, இவையெல்லாம் யோகம் என்று வழங்கப்பட்டாலும் இவை தேக, பௌதிக அம்சங்களையே முக்யமாகக் கொண்டிருப்பதால் drill மாதிரித்தான். லெஃப்ட் ரைட்; அபௌட் டர்ன்! இதில் என்ன விளையும்? இதெல்லாம் பிரயோஜனமில்லை; கால விரயம் தவிர வேறில்லை. ஹ்ருதயத்தைக் கொண்டே செய்யும் அன்பு யோகந்தான் நேரே ஆண்டவனிடம் கொண்டு சேர்ப்பதுஎன்பார்.

ஸ்ரீமதி இந்திரா தேவி பௌதிக யோகாப்யாஸங்களை இனிய அன்புணர்வுகளோடு பொருத்தி ஸாயியோகம் என்பதாகப் பிரசாரப்படுத்தி வருகிறார். அவருக்கு அதைத் திடீர் உபதேசம் செய்து திடுக்கிட வைத்ததும் (ஸூக்ஷ்ம) ஸாயிதான். ஆயினும் அது அனைவருக்குமானதல்ல போலும். எனவேதான் அனைவர்க்குமானஅசல்ப்ரேம யோகத்தை ஸ்வாமி கூறுகையில் தமது பெயரிலேயே ஆன ஸாயி யோகத்தை socalled Sai Yoga (ஸாயி யோகம் என்பதாக என்னவோ சொல்லப்படுகிறதே அது) என்று ஹேௗனமாகக் குறிப்பிடுகிறார். “தனிப்பட்ட பக்தியோகம் ஒன்றே தலை சிறந்தது. பல யோகங்களைக் கலப்பது குழப்பந்தான் உண்டாக்கும்என்கிறார்.

இப்படி அன்பு பயில்வதையே ஆன்ம ஸாதனைச் சிகரம் என்று அவர் கூறினாலும், ‘ஸாதனைஎன்றால் ஓரிடத்தில் அமர்ந்து ஒரு தியானமாக அப்யஸித்தால்தான் மனிதப் போக்குக்கு நிறைவு ஏற்படும் என்பதை எஸகாலஜிட்களும் போற்றும் நம்ஸாயிகாலஜிஸ்ட்சறிவார். இதனாலேயே ஸ்வாமி அனைவர்க்கும் ஜ்யோதித் தியானம் விதிக்கிறார். அதிலும் எப்படி அன்பையே ஊடுருவச் செய்கிறார் பாருங்கள்: நம்மெதிரே உள்ள தீபஜ்யோதியில் கண்ணையும் கருத்தையும் ஒருமுகப்படுத்தி, நமது புருவ மத்தி வழியாக அது நம்முள் புகுந்து இதயத்தில் தோய்ந்து, அங்கிருந்து ஸர்வாங்கங்களுக்கும் ஒளி பாய்ச்சி அவற்றை சுத்தி செய்வதாக ஆழ்ந்து பாவிக்கும்படி கூறும் ஸ்வாமி, அதை அன்பொளியாகவே, அதாவது ஒளி என்பதால் சுடாமல் ஹிதமாகப் பாய்வதாகவே கருதச் சொல்கிறார். நம் சரீரம் முழுதையும் இப்படி அன்பொளியில் நிரப்பிக் கொண்டபின், அந்த ப்ரேம ப்ரகாசம் நம்மிலிருந்து புறப்பட்டு நமது உறவினர், நண்பர், பகைவர், மரங்கள், மிருகங்கள், பக்ஷிகள் முதலான ஸகல சேதன அசேதனங்களையும் சூழ்வதாக பாவிக்கச் சொல்கிறார். இவ்வாறாக ஒளியே பௌதிக வெளிச்சமாயின்றி, பிரேம சக்தியாகும் போது நம் ஹ்ருதய மத்தியில் இருத்திய ஜ்யோதிஸுக்குள் இஷ்ட தேவதையை அன்புருவமாக நிலைநிறுத்திக் கொள்ளுமாறும் பணிக்கிறார்.

அன்புக் கொடுமுடியில் நின்றுகொண்டு அறைகூவுகிறார்: “கொண்டு வந்து கொடுங்கள் அன்பை! அதற்கு விலையாக நித்யானந்தத்தை உங்களுக்குக் கட்டிக் கொடுக்கிறேன்! பக்தி தாருங்கள்; சக்தியைப் பிரதியாகத் தருகிறேன். கொண்டு வாருங்கள் விசனத்தையும், வேதனையையும், விசாரத்தையும், வியாகுலத்தையும்; திருப்பிக் கொண்டு போங்கள் ஆனந்தத்தையும் அமைதியையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும்!” அன்பிலே எத்தனை ஏமாளி வியாபாரியாகி விடுகிறார்? துன்பத் துட்டுக்கு இன்பப் புட்டை விற்கிறார். மணிவாசகத்தை அடியொற்றி, “ஸாயீ! ஆர் கொலோ சதுரர்?” என்று பாடலாம்தான்!

ஆம், சதுரமெல்லாம் போய் அவர் அசடாக நிற்பதும் ஓர் அழகு லீலைதான். அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம் அதை. மஹா புத்திமானான பகவான் அன்புக்காக அசடாகிறான். ஏன், பரமானந்த ஸ்வரூபன் அன்புக்காக சோகாக்ராந்தனாகி பெண்ணை முன்னிலைப்படுத்தி அலறியதைக் கேட்டோமே? “அன்புக் கண்ணீர் விட்டு, துக்கத்தோடு உங்களிடம் மறுபடி மறுபடி மன்றாடுகிறேன்…”

***

யோசித்துப் பார்த்தால், இரக்கமே உருவான, இளக்கமே வடிவான ஸ்வாமி அழுததில் ஆச்சரியமென்ன இருக்கிறது? இன்னம் எத்தனையோ விச்வவேதனை அழுகைகளை உள்ளேயே இருத்திக்கொண்டும் அவர் வெளியே சிரித்துக் கொண்டிருக்கிறாரே, அதுதான் ஆச்சரியம்!

இன்னோர் அழுகைக்கு நாம் ஆச்சரியப்படத்தான் வேண்டும்.

நாலைந்து ஆண்டுகளுக்கு முன் பம்பாய்தர்ம க்ஷேத்ரத்தில் நடந்த ஸம்பவம்.

ஸேவா தளப் பெண் தொண்டர்களுக்குப் பரிசளிப்பதற்காக ஸ்வாமி கடையிலிருந்து புடவைகள் தருவித்திருந்தார். நூறு புடவைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. எந்தக் காரியம் செய்தாலும் அதிலேஸின்ஸிரிடிகாட்டும் பகவான் ஒவ்வொரு புடவையாக எடுத்துப் பார்த்துத் தேர்வு செய்தார். அவருடைய டெஸ்ட்டில் தொண்ணூற்றாறு புடவைகள்பாஸ்ஆயின. பாக்கி நாலை உதவாதவை என வைத்துவிட்டார். கடைக்குத் திருப்பப்படுவதற்காக அவை ஓர் அட்டைப் பெட்டியில் போடப்பட்டன. அந்தப் பெட்டி ஸ்வாமிக்கு முன்னிருந்த மேஜை மீது இருந்தது.

ஸ்வாமி அடியார்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.

பேச்சிடையே ஸ்ரீ ஹிஸ்லாப், “இதென்ன, இந்தப் பெட்டியைச் சுற்றி ஜலமாயிருக்கிறது?” என்றார்.

ஆம், எங்கிருந்து எப்படி வந்தது என்று தெரியாமல் மேஜை மேல் தண்ணீராக இருந்தது.

ஆராய்ந்ததில் அட்டைப் பெட்டிதான் அதற்கு ஆரம்பஸ்தானம் என்று தெரிந்தது.

ஸ்வாமி குறுநகையோடு பெட்டிக்குள்ளிருந்த நாலு புடவைகளையும் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினார். நீருக்கு ஆரம்ப ஸ்தானம் பெட்டியல்ல, அந்தப் புடவைகளே என்று அப்போது தெரிந்தது. ஆம், ஒவ்வொரு புடவையின் ஓரங்களும் சொத சொதவென்று ஈரமயமாகக் கசிந்து கொண்டிருந்தன.

ஒருத்தருக்கும் காரணம் புரியவில்லை.

எல்லாம் தெரிந்த ஸ்வாமியே புரிய வைத்தார்: “இந்தப் புடவைகள் அழவாக்கும் செய்கின்றன! ‘நம்மை ஸ்வாமி வேண்டாமென்று ஒதுக்கி வைத்து விட்டாரேஎன்ற வேதனையில் அவை கண்ணீர் விடுகின்றன.”

அழுதால் துணிகொண்டு துடைப்பது வழக்கம். இங்கே துணியே அழுதபோது பகவான் அவற்றைத் தம் அன்புக்கரத்தால் துடைத்துத் தடவிக் கொடுத்து ஸமாதானம் செய்தார்.

ஜடம் என்று நீங்கள் நினைக்கின்றவற்றிலும் உயிர் இருப்பதுண்டு. இப்படித்தான் பூர்வத்தில் ராமாவதாரத்தின் போது ஸேதுபந்தம் செய்கையில் ஹிமாலயத்திலிருந்து சிகரங்களைப் பறித்து வந்த ஹநுமார், அணைக்கு இனி கல் தேவையில்லை என்று ஆனபோது வழியிலேயே அவற்றில் ஒன்றைப் போட்டுவிட்டார். ‘ஸ்ரீராம காரியத்துக்கு நாம் பயனாகாமற் போனாமேஎன்று ஜடமென நினைக்கப்படும் அந்த மலை அழுதது. அடுத்த அவதாரத்தில் அதைப் பயனாக்கிக் கொள்வதாக ராமன் வாக்கு அனுப்பிய பின்தான் அது ஆறுதலடைந்தது. கிருஷ்ணாவதாரத்தில் பகவான் குடையாகத் தூக்கிய கோவர்த்தன கிரி அதுதான். ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வந்த ஸ்வாமி இப்போதே இந்தப் புடவைகளைப் பிரயோஜனப்படுத்தி இவற்றின் துக்கத்தைத் தீர்ப்பேன்என்று மொழிந்தார் ஸ்வாமி. பெண் தொண்டர்களுக்குள் வித்தியாஸம் செய்யக் கூடாது என்ற நியாயம் மறவாமல், அந்த நாலு புடவைகளை அவர்களுக்குத் தராமல், ஸ்ரீமதி ஹிஸ்லாப் உள்ளிட்ட வேறு நாலு மாதர்களுக்கு அளித்தார்.

ஜட வஸ்துவும் அன்பை உணருமாமே!

உணரும்என்று நாம் உணர முடியாவிடினும் விஞ்ஞான பூர்வமாக அன்பைஅளந்து அறிவிக்கஜடக் கருவியே கண்டுபிடித்திருக்கிறார்களே! அந்தக் கதையை ஒரு அத்தியாயம் தள்ளிப் பார்க்கலாம்.

***

கிலரைக் காக்கும் அலகிலா அன்பினாலேயே அன்றோ அவதாரமே எடுத்திருக்கிறார்? அவரது ஒவ்வொரு மூச்சும் ஒவ்வொரு பேச்சும் அன்புக்காகவே அன்றோ? இப்படி எத்தனை நீண்ட பேச்சுக்கள்? எத்தனை எத்தனைக் காரியங்கள்? தனிமனிதர்களுக்காக, குடும்பங்களுக்காக, பாலருக்காக, இளைஞருக்காக, மாதருக்காக, தீனருக்காக, அனைவர்க்குமாக எத்தனை ஓயா அலுவல்கள், அலைச்சல்கள்? வேளைக்குச் சோறு தண்ணீர் இல்லாமல்? தரிசனமும் பேட்டியும் (குறிப்பாக, வெளியூர்களிலும் விழா நாள்களிலும்) தரவே எத்தனை மணிகள்? பதினாயிரம் ஸேவாதளத் தொண்டர்களில் ஒவ்வொருவருக்கும் பாத நமஸ்கார பாக்யம் தருவதற்காக மூன்றுமணி நேரம் மெல்லடி பெயர்த்துச் செல்வதைச் சொல்லுங்கள்!

விபரீதங்களிலிருந்து, விபத்துக்களிலிருந்து, வியாதிகளிலிருந்து, விரோதங்களிலிருந்து, வியாகுலங்களிலிருந்து, வறுமையிலிருந்து, இவற்றுக்கு மேலாக நாஸ்திகத்திலிருந்து, அஞ்ஞானத்திலிருந்து அனந்தம் அடியரைத் காப்பது இந்தச் சின்ன மூர்த்திக்குள் உள்ள அன்பு அணுக்கள் வெடித்து வெளியாகும் சக்தியில்தானே?

சொல்லி மாளுமா திருஷ்டாந்தங்கள்?

வீட்டுத் தலைவர் வெளிநாடு சென்றிருக்கிறார். தலைவியின் மரணம் அவளே அறியாது நெருங்குகிறது. அதனை அறிந்து ஸர்வக்ஞர் அவளது துணைக்கு ஆளனுப்புகிறார். அவளைத் தெளிவோடு கண்மூட வைக்கிறார். தஹனமும் யதோக்தமாக ஏற்பாடு செய்கிறார். அந்நிய நாட்டிலிருந்து தாயகம் திரும்பும் வீட்டுத் தலைவர் வீடு சென்று துடிக்க விடாமல், விமான நிலையத்துக்கு வண்டி அனுப்பி அவரை நேரே தாய்வீடான தம்மிடம் வரவழைத்துக் கொள்கிறார். அவரது துன்பத்தையெல்லாம் துடைத்தெடுத்து வீட்டுக்குத் தெம்போடு அனுப்புகிறார். எப்பேர்ப்பட்ட அக்கறை?

ஸமூஹக் கலவரத்தில் ஊர் ரத்தக்களறியாயிருக்கிறது. கணவர் ஊரில் இல்லாததால் தனிமையில் பயந்து தவிக்கிறாள் ஒரு பெண்மணி. கதவு தட்டப்படுகிறது. ‘ஸமூஹ விரோதிகள் தான் தட்டுகிறார்களா? அல்லது கணவர் திரும்பி வந்து விட்டாரா?’ “யார்?” என்று குழறுகிறாள். “நான் தான் ஸாயிபாபாஎன்று பதில் வருகிறது நமக்குள்நான் தான் இன்னார்என்று ஸஹஜமாகச் சொல்லிக் கொள்வோமே, அப்படி! ‘ஸாயிபாபாவா? நிஜமா? நிஜமென்று நம்பிக் கதவைத் திறக்கவா?’ என்று இவள் யோசிக்கையில், கதவு மூடியபடியே இருக்க, பாபா உள்ளே வந்து அபயஹஸ்தம் ஸாதித்து அலாதித் தைரியத்தைத் தந்து அந்தர்தானமாகிறார். தைரியம் அந்தர்தானமாகவில்லை!

இப்படி எத்தனை கேள்விப்படுகிறோம்?

அடியார் வீட்டுக் கல்யாணங்கள், அவர்களது அலுவலக ஸமாசாரங்கள், வியாபார வியவஹாரங்கள், காலேஜ் அட்மிஷன்கள், உத்யோக நியமனங்கள் யாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு தெய்விக சக்தியால் மட்டுமின்றி, மானுட ரீதியிலும் இவற்றுக்கானவற்றைக் கவனித்துக் கவனித்துச் செய்கிறாரே! ஜீவர்களது பிரதிகூலமான கர்மகதியை மீறி அவர்கள் விரும்பியதை செய்யச் இயலாதபோதும் அவர்களுக்கு மனம் தளராத வலிமையும், அதனினும் முக்கியமாக தம்மிடம் தளர்ந்து விடாத ப்ரேம பக்தியும் தருகிறாரே! இதற்கெல்லாம் ஆதாரம் நித்ய ஜீவனுள்ள அன்புச் சுனைதானே? “அன்புத் தத்வமே கையும் காலும் கொண்டு ஸத்யஸாயியாக ஸஞ்சரிக்கிறதுஎன்று ஏன் அறிந்தவர் சொல்லமாட்டார்கள்?

***

பெரிய பெரிய காரியங்கள் இருக்கட்டும். அவற்றில் பேரலை புரட்டும் பிரேம ஸமுத்ரமே சின்னச் சின்னக் காரியங்களிலும் ஜில்லிக்கஸ்ப்ரேதெரிக்கிற அழகைச் சொல்லுங்கள்:

நம்மை ஸ்வாதீனமாகரௌடிஎன்றும், ‘ராஸ்கல்என்றும் அழைக்கிறாரே, அப்போது;

நம் கன்னத்தில் குத்தியும் முதுகில் தட்டியும் செல்லம் கொடுக்கிறாரே, அப்போது;

நம்மைப் போலவே பேசிக் கேலி செய்கிறாரே, அப்போது;

அச்சமயம் நாம் வெட்கி அவரது முழந்தாளிலேயே முகத்தைப் புதைத்துக் கொள்ள, “ஸ்வாமியிடம் வெட்கப்பட்டுக்கொண்டு ஒளிந்து கொள்வதற்கும் அந்த ஸ்வாமியிடமேதான் வரவேண்டியிருக்கு, பார்த்தாயா?” என்று சொல்லி நம் கழுத்தைத் தடவிக் கொடுக்கிறாரே, அப்போது;

தடவித் தரும்போது எலும்பு உறுத்த, “இப்படி bonyயா ஆயிட்டியே!” என்று உருகிச் சொல்லும் அப்போது;

நல்லா ஸாப்பிட்டு உடம்பை ஸரி பண்ணிக்கப் போறியா, இல்லியா?” என்று விரலை ஆட்டிப் பயமுறுத்துகிற அப்போது;

அனந்தகோடி அலுவலில் இதை மறவாமல், தம்மைப் பார்க்க வந்த ஒரு டாக்டரிடம், “அவரு ஸ்வாமி சொல்லிக் கேட்கிறதில்லை. நீதான் அவருக்கு ப்ரோட்டீன் பிஸ்கட், மில்க் ஃபுட் இதுங்க பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடேன்என்று குழந்தையாகச் சொல்கிறாரே, அப்போது;

அயல் நாட்டு அடியாரின் சட்டைப் பாக்கெட்டுகள் வழியத் தாமே விபூதிப் பொட்டலத்தை அடைக்கும் அப்போது;

அதுவும் போதாமல், அவரது நாட்டிலுள்ள மற்ற அடியார்களுக்காக இந்த அடியாரின் பான்ட் பாக்கெட்டிலிருந்து தாமே ஓர் உறையை உருவி அது நிறையப் பொட்டலங்களை நிரப்பி அவருடைய கால்சட்டை ஜேபியில் திணிக்கும் அப்போது;

வாதக்காலி ஒருத்தி அமரத் தாமே ஸ்டூலை எடுத்துப் போடும் அப்போது;

கிழவருக்கு கைத்தடியை எடுத்துத் தரும் அப்போது;

பொட்டலமாகத் தராமல் தாமே ஸ்ருஷ்டித்துத் திருநீறு தரும்போது அதைக் கட்டிக்கொள்வதற்காக பக்தருக்குத் தாமே காகிதத்துண்டு எடுத்து வந்து கொடுக்கிறாரே அப்போது;

சில சமயங்களில் ஸ்ருஷ்டித்த விபூதியைத் தம் திருக்கரத்தாலேயே வாயிலும் போடுகிறாரரே, அப்போது;

அதற்கு மேல், நம் உதட்டுப்புறம் சிந்திய விபூதியைத் தமது கைக்குட்டையாலேயே துடைத்தும் விடுகிற அப்போது;

புழுக்கத்தில் சட்டெனத் தம் மேல் காற்றுப்படுவது கண்டு திரும்பிப் பார்த்து, விசிறுகின்ற அடியாரிடமிருந்து விசிறியைப் பிடுங்கிக் கொண்டு, “எனக்கு என்ன சேவை? நான்தான் சேவைசெய்ய வந்திருக்கேன்என்று சொல்லி, அவருக்கும் சேர்த்துத் தாமே விசிறும் அப்போது

இப்படி எத்தனை எத்தனை எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம் எப்போதும், அணு அணுவும் அன்பு மாத்திரமாக நம் ஆண்டை திகழ்வது பற்றி.

சாமானியமாகத் தோன்றும் ஓர் அசாமானிய அன்புக் கரிசனத்தை ஸ்ரீ ஜி.கே. தாமோதர ராவ அவர்கள் சொல்வார். பர்த்தியிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் ஸ்வாமியின் காரை ஜி.கே.டி கோஷ்டியினரின் வண்டி பின் தொடர்ந்தது. அதிவேகத்தில் பகவான் வாஹனம் செல்ல, இவர்களது கார் அதற்குப் பிற்பட்டுச் சென்றது. சிறிது போதில் ஸ்வாமியின் கார் இவர்களது பார்வையிலிருந்தே மறைந்தது. அப்புறம் சிறிது நாழிகைக்குப்பின் ஸ்வாமி கார் மீண்டும் புலனாயிற்று. சாலை ஓரத்தே அது நிறுத்தப்பட்டிருந்தது. என்ன காரணமோ என எண்ணியபடி இவர்கள் அதை அடைந்தார்கள். “ஒண்ணுமில்லை; உங்களையெல்லாம் காணுமேன்னுதான் நிறுத்தச் சொன்னேன்என்றார் பகவான். இங்கே இவை அச்சு மையில் அஞ்சாறு வார்த்தைகளாகவே நிற்கின்றன. ஆனால் ஸாயித்தாயின் குரலில் இதைக் கேட்ட ஜி.கே. டியோ, “யார் சொல்லுவா அப்படி? யார் சொல்லுவா?” என்று உணர்ச்சியெழுச்சியுடன் கேட்கிறார்.இன்னொரு சமயம் நண்பகல் வேளையில் அத்யந்த பக்தர் ஸ்வாமியிடமிருந்து விடைகொள்ள முற்படுகையில், “சாப்பிட்டுட்டுப் போடா” (போஞ்சேயிரா) என்று ‘அடா’ போட்டு அடாத அன்பைக் காட்டி, தாமே குழவி கொண்டு ஜியாமெட்ரி முக்கோணம்போல் திருத்தமாகச் சப்பாத்தி தயாரித்துப் பரிமாறினாராம் குழவிக்குத் தாயாக.